சிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்.!

1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.

1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் ஜெ .ஆர். ஜெயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.

1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று 3 பேரைக் காயப்படுத்தி பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.

1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.

1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.

1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.

1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

இவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு ஜெ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது.

1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.

1.jpg

இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர் தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து விடுதலை பெற்ற தமிழீழத்தில் தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.


An error has occurred. This application may no longer respond until reloaded. Reload 🗙