புலிப்பாய்ச்சலும் பின்னோக்கிப் பாய்ந்த இராணுவமும்.!

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், இதுவரை காலமும் நடைபெற்ற சண்டைகளில், யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற அரசாங்கம் நடத்திய “முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை பல்வேறு காரணங்களினால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இராணுவம் குடாநாட்டின் மீது நடத்திய “பவான்” இராணுவ நடவடிக்கையை விட இது அழிப்பிலும், ஆக்ரோஷத்திலும் குறைவாகவும், சிறிலங்காவின் “ஒப்பரேஷன் லிபரேஷனை” விடப் பாரியதாகவும் இருந்துள்ளது. “பவான்” நடவடிக்கையில் உலங்க்குவானுர்த்திகளால், ஏவப்பட்ட எறிகணைகளாலும், பீரங்கித் தாக்குதல்களாலும், முன்னேறிய படையினராலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் கொல்லப்பட்ட, 6000 – 8000கும் இடைப்பட்ட பொதுமக்களில், “பவான்” நடவடிக்கையின் போதே பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் தரைப்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டது எல்லாக் கொலைகளுக்கும் சிகரமாய் அமைந்தது. “முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையில், ஷெல் வீச்சுக்களினாலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு நிமிடத்துக்கு ஒரு ஷெல்லாவது விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. நவாலி சென்பீற்றர் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொலைச் செயல்களுக்கு மகுடம் வைத்தது போல் இருந்தது. இந்திய அரசாங்கத்தின் பூரண ஆசியுடனேயே இக்கொலைகளும் நடத்தப்பட்டன என்பது முக்கிய விடயமாக உள்ளது. இவ் இராணுவ நடவடிக்கையின் போது 247 பொதுமக்கள் கொல்லப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 470 பேர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புக்களை இழந்தார்கள். கொல்லப்பட்டவர்களில், 65 பேர் குழந்தைகளாக உள்ளனர். இறந்து, காயமடைந்தவர்களில் அரைவாசிக்கு மேல் பெண்களும், வயது முதிர்ந்தோர்களும் ஆவார். தேவாலயம் மீதான தாக்குதலில் மட்டும் 120 பொதுமக்கள் இறந்தனர். அங்கு இறந்த 20 சிறார்களில் 13 பேர் கைக்குழந்தைகளாகவும் உள்ளனர்.

யாழ். குடாநாட்டில் சிறிலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பலாலியிலிருந்து அச்சுவேலி, சங்கானை, சண்டிலிப்பாய், அளவெட்டிக்கூடாக ஒரு பெரும் அணியும், மாதகலிலிருந்து இன்னொரு பேரணி, கரையோரமாக காரைநகருக்கூடாகவும், ஊர்காவற்துறையிலிருந்து அராலிக்கூடாகவும் இன்னொரு அணியும் வந்து வட்டுக்கோட்டை, துணாவி ஆகிய இடங்களில் சந்திப்பதே முதற்கட்ட நடவடிக்கையாகும். பின்னர் அராலியிலிருந்து, அனைத்து அணிகளும் கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளிக்கூடாக யாழ். நகரை நோக்கி வந்து அதனைக் கைப்பற்றுவதாக இராணுவ திட்டம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 09ம் திகதி காலை “முன்னோக்கிப் பாய்தல்” என்ற குறியீட்டுப் பெயருடன், 4 பிரிகேட் படைப் பிரிவுகளைக் கொண்டதான 10000க்கு மேற்ப்பட்ட இராணுவத்தின் இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அப்போதே இப்போர் நடவடிக்கையின் தோல்வியைத் தேசியத் தலைவர் பிரபாகரன் தீர்மானித்து விட்டதாகக் கருதுகிறேன். பின்னர், எப்படி, எங்கு, எந்த நேரத்தில் இராணுவத் தோல்வியை முற்றுப் பெறச்செய்ய வேண்டும் என்ற அம்சங்களை தலைவர் தீர்மானிப்பதும், அதனை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துவதுமே எஞ்சி இருந்தன.

முதலில், இராணுவ நடவடிக்கை தமிழ் இனப்பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கவில்லை. கொழும்பில் உள்ளூர் அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. தென்பகுதியில் போர் ஆயத்தங்களின் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் ஜனாதிபதிப் பதவியை அகற்றப் போவதாக தேர்தல் காலத்தில் பகிரங்கமாக கூறிய போதிலும், சகல வல்லமை பொருந்திய அப் பதவியை விட்டுவிட ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு மனம் ஒப்பவில்லை. ஜூலை 15ம் திகதிக்குள் அதனைச் செய்வதான காலக்கெடு நெருங்கிவந்து கொண்டிருந்தது. எனவே இப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவும், இராணுவ வெற்றி ஒன்றுடன் ஏனைய பிரச்சினைகளைச் சமாளித்து தனது அரசியல் நிலையைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஜனாதிபதி சந்திரிக்கா விரும்பினார். எனவே தான் உக்ரேனிலிருந்து வருவதாக இருந்த AN – 32 துருப்புக்காகவும் விமானங்கள் போன்ற இராணுவத் தளபாடங்கள் முழுமையாகா வந்திறங்கும் முன்னரே இராணுவ நடவடிக்கையைத் தொடங்க அரசாங்கம் விரும்பியது. எனவே தான் “இந்தியா டுடே”க்கு அளித்த பெட்டியில் சந்திரிக்கா கூறியிருந்தது போன்று, “ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்படும். அப் பகுதியே துடைத்தழிக்கப்படும்” என்று தெரிந்தும் இராணுவ நடவடிக்கையை அவர் அவசரப்படுத்தித் தொடங்கினார். இத்தகையதொரு இராணுவ நடவடிக்கை குடாநாட்டின் மீது ஆரம்பமாகப் போவது. மேற்கூறிய உள்ளூர் அரசியல் நோக்குக் காரணமாக ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. எந்தத் திகதி என்பது தான் தெரியாது இருந்தது. எனவே இதனை எதிர்கொள்ள புதிய போராளிகள் ஏராளமானோரைச் சேர்த்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தையும், சர்ந்தர்ப்பத்தையும் விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்தது. மேலும் மண்டைதீவு மீதான முன் எச்சரிக்கையான தாக்குதல், அரசாங்கத்தின் இராணுவ தந்திரோபாயத்தில் பெரும் ஒரு அடியாகவும், ஓட்டையாகவும் அமைந்தது. எனவே, இராணுவம் பலாலியிலிருந்து பெரும் படை நகர்வை, கிடுக்கி போன்ற வடிவமைப்பில் (pincermovemenr) நடத்த வேண்டியிருந்தது. மண்டைதீவில் இருந்தோ ஏனைய முகாம்களில் இருந்தோ ஒரே நேரத்தில் புறப்படும் கடந்த கால நடவடிக்கை, இம் முறை கைக்கொள்ளப்படாது, பலாலியிலிருந்து பெரும்படை நகர்வை திட்டமிட்ட ரீதியில் வழிநடத்துவது என்ற நோக்கத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். இங்கு தான் இப்படை எடுப்பின் தோல்விக்கான பலவீனம் இருந்தது. அப்பலவீனத்தை தேசியத் தலைவர் மிக நுட்பமகா, அவகாசமாக பயன்படுத்திக் கொண்டதே, போர் நடவடிக்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அது சிறீலங்காவின் “முன்னோக்கிப் பாய்தல்” என்ற தாக்குதல் நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் “புலிப்பாய்ச்சல்” என்ற தாக்குதல் நடவடிக்கைக்கு வழிவகுத்தது



An error has occurred. This application may no longer respond until reloaded. Reload 🗙